வியாழன், 27 மே, 2021

புதுமைப் பித்தனின் “ஞானக் குகை” சிறுகதை அவிழ்க்கும் புதிர்கள் - மோகன ரவிச்சந்திரன்

புதுமைப் பித்தனின் “ஞானக் குகை” சிறுகதையை வாசிக்கத் துவங்கிய பொழுது வெகு எளிதாக இருந்தது. சொற் சிக்கல் இல்லாமல், காட்சித் தொடர்ச்சி சீராகவே இருந்தது. வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தொடரத் தொடர அவற்றின் வீச்சு பலவிதமான புதிர்களை நோக்கி இழுத்தது. கதை முடிவுற்ற இடத்தை ஒரு முடிவாகக் கொள்ள முடியாமல் மேலும் பக்கங்களைத் திருப்ப வேண்டியிருந்தது.

ஒரே மூச்சில் ஏழு பக்கங்களையும் வாசித்து முடித்தேன். வாசித்த பிறகு மனம் முற்றிலும் வேறு ஒரு நிலைமையில் பதைபதைக்கத் துவங்கி விட்டது. ஒவ்வொரு கதாபாத்திரமும் பல்வேறு பரிமாணங்களை அடைந்து ஒரு மிக நீண்ட காவியத்தன்மைக்குள் தள்ளியது.

சிறுகதைகளில் மிக முக்கியமாக சிலாகிக்கப்படுவது அதன் கட்டமைப்பு. இச்சிறுகதையில் உள்ள கட்டமைப்புக் கூறுகள் பிரமிப்பூட்டுவனவாக உள்ளன. முதலில் ஒரு சித்திரம் மிகத் தெளிவாக வரையப்படுகிறது. பின் அதன் தொடர்ச்சி கலைக்கப்பட்டு, பல்வேறு புதிர்களை நிரப்புகிறது. புற உலகிலிருந்து விடுபட்டு ஒருவிதமான அக உலகினுள் பயணத்தைத் தொடர்கிறது. கதாபாத்திரங்கள் வெகு நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, அவற்றின் செயல்பாட்டுக் காட்சிகள் அதி நுட்பமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

’அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்கள்’ என முதல் சில வரிகளிலேயே ஒரு பாத்திரத்தின் தன்மை முற்றிலும் விவரிக்கப்பட்டு விடுகிறது. கதையின் முடிவும் துவக்க வரிகளிலேயே நிறைவு பெறுகிறது. முதல், நடு, முடிவற்ற ஒரு பின்நவீனத்துவ வகைமை கையாளப்படுவதை உணர முடியும்.

பின்னர் இரண்டாம் பகுதியின் முடிவில் ஒரு மாய யதார்த்தம் செயல்படுத்தப்பட்டு, நிறைவுப் பகுதி நோக்கி விவரணை செல்கிறது. அறிவுநிலைக்கும் மூடத்தனத்திற்கும் இடையில் ஒரு மோதல் நிகழ்கிறது.    

விவரணை, பேச்சு, இயல்பு என ஊடாடும் சிலந்தி வலை போன்ற ஒரு கட்டமைப்பு ஏதோ ஒரு மையத்தை நோக்கி ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. விவரணைக் கூறுகள் வாசிப்பவனைப் பல்வேறு தளங்களுக்கு அழைத்துச் செல்கின். ’ஸ்பரிசத்திலே புளகாங்கிதமடைந்த குழந்தையின் சிரிப்பு படிப்படியாக மறைந்தது. கண்களில் அறிவுச் சுடர் ததும்பியது’ என முன்பு மேற்கோளிட்ட வரிகளுக்கு எதிர்நிலையை விவரித்து அதிர்விக்கிறது.  

நேர் கோடுகள், குறுக்குக் கோடுகள் மற்றும் சாய்நிலைக் கோடுகளால் கட்டமைப்பின் செயல்தளம் எட்டப்படுகிறது. அதே போல, வலிமை மற்றும் உறுதிப்பாட்டை வலியுறுத்த நீள் சதுரக் கோணங்களைக் கொண்ட கோடுகளாலும் கட்டமைப்பு செயல்படுத்தப்படுகிறது. அதாவது அறிவு மங்கி விழித்துக் கொண்டிருக்கும் கண்களில் அறிவுச் சுடர் ததும்புகிறது.

இச்சிறுகதையில் கட்டமைப்பு உள்வயமாக மற்றும் புறவயமாக என இரண்டு நிலைகளிலும் செயல்படுகிறது. உள்வயமும் புறவயமும் ஒன்றை ஒன்று இயக்குகையில், உள்வயமான எதிர்நிலைகள் இரண்டும் பின்னிப் பிணைந்து அதிர்வுகளை உருவாக்குகின்றன. ஒரு குழப்பத்தை விளைவிப்பதன் மூலமாக ஒரு தெளிவை உருவாக்கும் உத்தி கையாளப்படுகிறது.

கதையின் மையமே கட்டமைப்பைத் தீர்மானிப்பதாக உள்ளது. மேலும் அது ஒழுங்கற்ற நிலையை வரிசைப்படுத்துவதற்கான ஒரு எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாகவும் உள்ளது.  வடிவத்தின் மீதான பிரக்ஞை ஒரு படைப்பாளரின் உயர்தரமான, இறுதியான ஒரு தன்மை என அழைக்கப்படுவதுண்டு. ஒரு ஏழு பக்கச் சிறுகதையில் இந்தச் செயல் ஆக்கப்பூர்வமான முறையில் சாதிக்கப்பட்டுள்ளது. சிறுகதைக்கான மேலும் சில கூறுகளாக அடித்தளம், உள்ளீடு, மையம், முரண், சூழல், பின்புலம் எனப் பல்வேறு நிலைகளை இதில் உள்வாங்க முடியும்.

மரபுரீதியான, ஒழுங்கான விவரணை இல்லாமல் உடைந்த கட்டமைப்பாகச் செயல்படுவதும் ஆக்கப்பூர்வமான விவரணை என பின்நவீனத்துவம் கூறுகிறது. காலவெளிகளைச் சிதைத்துவிட்டு, நிகழ்காலத் தருணங்களை விரிவுபடுத்துவதன் மூலம் நவீனக் கட்டமைப்பு செயலாற்றுகிறது. மேலும் அது இறுதித் தீர்மானங்களை உடைத்து விட்டு வாசிப்பவனை நிலை குலையச் செய்கிறது. 

அறிவு வென்றதா, மூடத்தனம் வென்றதா என்பது ஒரு பொருட்டல்ல. இரண்டும் அதனதன் போக்கில் எவ்வாறு சிறந்த எதிர்நிலைகளாகச் செயல்படுகின்றன என்பது கூட ஒரு சிறிதளவே மையத்தை நெருங்கியதாகக் கொள்ள முடியும். 

-/|||||||||||\-



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக