வியாழன், 27 மே, 2021

ப்ரான்ஸ் காஃப்காவின் உருமாற்றம் – மோகன ரவிச்சந்திரன்

அனைத்து விதங்களிலும் அதிநவீனப் படைப்பெனக் கருதப்படும் காஃப்காவின் ”உருமாற்றம்” பல்வேறு நிலைகளின் புரிதல்களையும் நிகழ்வுகளையும் உள்ளடக்கியுள்ளது. முதன்மைக் கதாபாத்திரம் கிரிகர் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் மாறுதலடைகிறான். இந்த மாற்றம் தன்னிகரற்ற ஒரு பண்புநிலையான அந்நியமாதல் பற்றி தெளிவுபடுத்துகிறது. வாழ்வைச் சுமை எனக் கருதும் கிரிகர் சமூகத்திலிருந்து மட்டுமல்ல தன்னிலிருந்தே அந்நியப்படுகிறான். கசப்பான இருத்தலின் சுமையிலிருந்து தப்பித்துச் செல்ல விரும்புகிறான். 

இவ்வாறாக மனிதர்கள் பணம், பொருள், பிரசித்தம் எனத் தங்கள் அடையாளங்களை இழப்பதைப் பதிவு செய்கிறான். இந்த ஓட்டம் எவ்விதத்திலும் மகிழ்ச்சியைத் தராது, அதற்கு மாறாக, தங்கள் வாழ்வின் இருத்தல் நிலையின் பயனற்ற தன்மையை உணர வழி வகுக்கக்கூடும். அந்த உணர்வு தற்கொலைக்குத் தூண்டுகிறது.

காஃப்காவின் உருமாற்றம் இருத்தலியல் கோட்பாட்டின் உன்னதமான ஆய்வுகளில் ஒன்று. அது மானுடர்களின் மனநிலையைப் பற்றிப் பேசுகிறது. மிக அதிக அளவிலான குறியீட்டுத் தன்மையுடன் கூடிய இந்தப் புனைவு ஒரு தனிநபருக்கும் சமூகத்திற்கும் இடையிலான உறவின் இயல்புகளையும் அந்நியத்துவ நிலைகளையும் வெளிப்படுத்துகிறது. மனிதர்களின் வாழ்நிலையை கொஞ்சம் கொஞ்சமாக உருமாற்றி, மனிதனை அதி நவீன விலங்காக மாற்றி, ஒரு வெறுப்பு நிலையை உருவாக்கக் கூடிய தன்மையை விவரிக்கிறது.

இந்தப் படைப்பில் மானுட வாழ்வின் உளரீதியான, உடல்ரீதியான எதிர்மறைக் கூறுகளை காப்கா நேரடியாக வெளிப்படுத்துகிறார். சிறிது சிறிதாக கிரிகர் வலுவிழந்து வருவதன் பல்வேறு அறிகுறிகளையும் சாவின் வலிமிக்க பல்வேறு போக்குகளையும் தெளிவாக்குகிறார். வலிமிகுந்த சாவை  மெதுவாக எதிர்கொள்ளும் ஒரு மானுட இருப்புநிலையைச் சுற்றி ஒரு மாய வலையைக் குறியீட்டுத் தன்மையுடன் பின்னுகிறார்.

தட்டப்படும் கதவுகள், இடம் மாறும் மரச்சாமான்கள், கசங்கிய சீருடைகள், முழு அங்கியுடன் கூடிய சித்திரப் பெண் என பலவிதமான குறியீடுகள் இடம் பெறுகின்றன. உச்சபட்சக் குறியீடு கரப்பான் பூச்சி. பொருத்தமற்ற, வெறுமையான, அர்த்தமற்ற வாழ்வின் குறியீடு. அது நவீன இருத்தலின் தேக்கநிலையைக் குறிக்கிறது.

மரச்சாமான்களை அகற்றுவது திரும்பவும் மனிதனாக உருமாற விழையும் கிரிகரின் நம்பிக்கையை அகற்றுவதாக உள்ளது. மரச்சாமான் என்பது கிரிகரின் கடந்தகால மானுட உறவுநிலை. தாயும் தமைக்கையும் கிரிகரின் அறையிலிருந்து அகற்றத் தீர்மானிக்கும் மரச்சாமான் கிரிகரின் மானுட இயல்பைக் குறிப்பதாக உள்ளது.

குறியீட்டுரீதியாக அவனுடைய அறை அர்த்தமற்ற ஒரு பாழ்நிலம். மானுடத் தன்மையின், மானுட உறவுகளின் அறிகுறிகளற்ற ஒரு பாழ்நிலம். மற்றொரு குறியீடு அவனுடைய தந்தை அணிந்திருக்கும் சீருடை. அது அதிகாரத்தின் குறியீடாக இருக்கிறது. சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும் சித்திரத்தில் புசுபுசுவென உடை அணிந்திருக்கும் பெண் அன்பின் குறியீடு. அது அவனைத் தனிமையிலிருந்து தப்பிக்க வைக்கிறது. அர்த்தமின்மையைக் கண்டடைந்த அவன் வாழ்வில் அந்தச் சித்திரம் ஒரு அர்த்தத்தை வழங்குவதாக உள்ளது.

அவனுடைய விற்பனையாளர் பணி அதிகப் பயணங்களைக் கொண்டது. அது ஆழ்ந்த தனிமையையும் களைப்பையும் தரக்கூடியது. மேலதிகாரி மீதான தொடர்ச்சியான அச்சம், குடும்பக் கடன்நிலைமை, நீண்ட கால மானுட உறவுகளைப் பேண முடியாமல் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டிருத்தல் வாழ்வின் மீது ஒரு அர்த்தமின்மையை வழங்குவதாக உள்ளது. அவனுடைய உருமாற்றத்திற்கு முன்பும் இதே நிலைதான்.

தோல் உடையால் மூடப்பட்ட பெண், அழகின் குறியீடு, வளத்தின் குறியீடு. புழுக்கள் வறுமையின் குறியீடு. இந்தப் படிமம் குறித்து ஃப்ராய்டிய உளப்பகுப்பாய்வு விமர்சகர்கள் மேலும் பல விளக்கங்களைத் தருகிறார்கள்.

-/||||||||||||||||||\-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக