வியாழன், 27 மே, 2021

மனோதிட இருத்தலும் நொறுங்கிப் போவதும்


ஏர்னஸ்ட் மெய்ஸ்டர் (Ernst Meister) (செப்டம்பர் 3, 1911 – ஜூன் 15, 1979) ஜெர்மானிய கவிஞர், எழுத்தாளர். மெய்ஸ்டரின் கவிதை இருத்தலியலின் இருண்ட அருவமான நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது. 1976 ஆம் ஆண்டு எழுதிய கவிதைத் தொகுப்பில், Im Zeitspalt ("In Time's Rift"), மெய்ஸ்டர் வெளிப்படையாக மரணம் மற்றும் இருத்தலின் ஒன்றுமில்லாத தன்மை பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்.

ஒரு "மோசமான நிர்வாண" கவிஞராக மாறிய தத்துவவாதி கவிதை வடிவில் தத்துவத்தைத் தொடர முடிவு செய்தால் என்ன ஆகும்? சுவரற்ற அண்டவெளி நூலில் இது ஏர்னஸ்ட் மெய்ஸ்டரின் பணி. ஒரு கடினமான கவிதை வெற்றிடத்தில் மரணம், சிதைவு மற்றும் இருத்தலை ஆராய்வதற்கான கவிதைகளின் ஒரு கடினமான புத்தகம்.

புத்தகத்தில் மூன்று பகுதிகள் - மொத்தம் ஐம்பத்து ஏழு தலைப்புகளில், ஒவ்வொன்றும் பதினைந்து குறுகிய வரிகளுக்கு மேல் இல்லாதவைகளாக இடம் பெறுகின்றன. இதில் ஹெடெக்கர், ஹெகல் மற்றும் நீட்சேயின் தத்துவத்தை ஆராய்ந்திருக்கிறார்.

ஹெடெக்கரியச் சொற்களைக் கையாள்வதன் காரணமாக, இந்தக் கவிதைகளின் சொற்றொடர் காலம், ஆன்மா, பூமி, வாழ்வு, வெறுமை, மனிதத்தன்மை, நித்தியத்துவம், மற்றும் இருத்தல் போன்ற அருவமான சொற்களின் ஒரு வரையறுக்கப்பட்ட கலவையாகும். உதாரணமாக, தொகுப்பில் உள்ள ஒரு கவிதை அதன் தலைப்பைச் சித்தரிக்கிறது:

 

மனோதிடத்துடன் இருத்தல்

அல்லது நொறுங்கிப் போவது

அனைத்தும் ஒன்றுதான் இந்தப் பிரபஞ்சத்தில்.

 

ஒன்றுமில்லை என்பது இருக்கிறது

வெறுமையின்

விளிம்பை அடைய.

 

அந்த விளிம்பும் அங்கு இல்லை.

இருக்கிறது

என்றால் என்ன

 

அண்டவெளியின்

சுவரற்ற கொள்கலனில்

நிறைத்தது எதை, வெளியேற்றியது எதை.

 

இங்கே அதன் முழுமையை விவரித்த கவிதை இந்த தொகுப்பில் உள்ள மற்ற கவிதைகளுக்கு முன்மாதிரி. குறிப்பாக இது மிகவும் வெளிப்படையான கவிதை – திரும்பக் கூறுதல் தன்மை கொண்டது. ஆனால் அவர் ஒலித்தல் விளைவுக்காக மட்டும் இதை செய்யவில்லை. மாறாக, அவரது நோக்கம், ஒரு மையமான முரண்பாட்டின் தொடர்ச்சியான ஆய்வில் மொழி மற்றும் கருத்தாக்கங்களைச் சுருக்குவது தான். இந்த நூலின் மூன்றாவது பகுதியின் பத்தாவது கவிதை:

 

அதீதமானது மற்றும் கடினமானது

எதுவெனில்

 

சிந்திப்பது

இங்கு இருத்தல் அல்ல.

 

ஒருவரின் பிரக்ஞை

சாவதை அறிவது எவ்வாறு,

 

அதன் எதிர்நிலைகளிடம்

சரணடைவது எவ்வாறு?

 

மேலே உள்ள கவிதையில், Wallless Space நூலில் உள்ள மற்ற கவிதைகளில் போல, வெறுமை என்பது சிந்தனையைத் தடுக்கும் ஒரு இருத்தல்நிலை என்றாலும், மரணத்தின் வெறுமை குறித்து விவரிக்க மொழியைப் பயன்படுத்துகிறார் மெய்ஸ்டர்.

இவரது கவிதை, மாற்று வரிவடிவம் மற்றும் கடினமான தொடரியலுக்காகக் குறிப்பிடத்தக்கது. மெய்ஸ்டரின் சமகாலத்தவரான ருமேனிய கவிஞர் பால் செலனின் (1920-1970) ஜெர்மன் எழுத்துக்களுடன் இவர் எழுதிய படைப்புகள் ஒப்பிடப்பட்டுள்ளன. 16 கவிதைத் தொகுப்புகளை எழுதினாலும், மெய்ஸ்டர் இலக்கிய உலகில் பிரபலமடையவில்லை. அவரது படைப்புகள் அவரது வாழ்நாளில் ஒப்பீட்டளவில் அறியப்படாதவையாகவே இருந்தன.


-/||||||||||||||||||||||||\-



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக