வியாழன், 27 மே, 2021

கானகத்தின் குரல் - மோகன ரவிச்சந்திரன்

ஜாக் லண்டன் (1876–1916) அமெரிக்க நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். அவருடைய சிறந்த படைப்புகளில் முக்கியமானவை: The Call of the Wild (1903) மற்றும் White Fang (1906) இரண்டும் உயிர் வாழ்தலுக்கான அடிப்படைப் போராட்டங்களைச் சித்தரிக்கின்றன. சார்லஸ் டார்வின், காரல் மார்க்ஸ், நீட்ஷே போன்றோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர் ஜாக் லண்டன்.

1900 ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்கிறார். முழு நேர எழுத்துத் தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டுகிறார். 1903 கோடையில் மனைவி மற்றும் இரு மகள்களை விட்டுப் பிரிந்து, காதலியுடன் வாழ்க்கையைத் தொடர்கிறார்.    

ஜாக் லண்டனின் பெரும்பாலான நாட்கள் மோசமான உடல்நிலையால் கழிகின்றன. 1915-ல் நடக்க முடியாத கால்வலியால் முடமாகிறார். மதுப்பழக்கத்தின் காரணமாக குடல்வலியால் அவதிப்பட நேர்கிறது. வலியைக் குறைப்பதற்காக ஒப்பியம் உட்கொள்ளத் துவங்கி போதை மருந்துகளுக்கு அடிமையாகிறார். அதன் விளைவாக சிறுநீரகங்கள் பாதிப்படைகின்றன. தொண்டையில் புற்றுநோய் தாக்குகிறது. அப்பொழுதும் புகைப்பிடிப்பதைக் கைவிட மறுக்கிறார்.

1916 நவம்பர் 21-ஆம் தேதி விடியலுக்கு முன் அதிக அளவு போதை மருந்தை உட்கொள்கிறார். அன்று மாலை தனது 40-ஆவது வயதில் ஜாக் லண்டன் காலமானார். ஜாக் லண்டன் வாழ்ந்த காலத்தில் இருந்த சூழலுடன் அவரால் ஒத்துப் போக முடியாமல் இருந்துள்ளது. தனது ஆழ்ந்த மனவுறுதியால் அனைத்தையும் வெல்ல முயன்று, ஒரு கலகக்காரராகவே வாழ்ந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.  

வாழ்நாளில் 16 ஆண்டுகள் எழுதிக் கழித்த ஜாக் லண்டனின் படைப்புகளில் 19 நாவல்களும், கட்டுரை மற்றும் சிறுகதை என 18 தொகுப்புகளும் மேலும் பல சமூகவியல் கட்டுரைகள் மற்றும் சுயசரிதையும் அடங்கும். The Call of the Wild 30-க்கும் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி உள்ளன.

ஒரு நாய் மற்றும் ஒரு மனிதனுக்கிடையில் நிகழ்ந்த ஒரு நட்பை மிக அழகாகச் சொல்கிறது இந்த நாவல். ஒரு அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நாய் திருடப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. புதிய மனிதர்கள், புதிய சூழல்களில் அந்த நாய் எதிர்கொள்ளும் துயரங்களும் தோல்விகளும் மிகுந்த நுட்பத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. வலிமையுள்ளவன் வாழ்வான் என்பது குறித்து அதிகம் பேசுகிறது இந்த நாவல்.

ஜாக் லண்டன் தனது எழுத்து நடையில் ஒரு ஆழமான சிந்தனையுடன் கூடிய ஈர்ப்புமிக்க, கனிவு நிரம்பிய தொனியை இழையோட விடுகிறார். கதையின் நிகழ்வுகளை அவர் விவரிக்கும் போக்கு சொல்லாடலில் ஒரு தீர்க்கமான வெளிச்சத்தைப் பாய்ச்சுவதாக உள்ளது. அவருடைய சொல்லாடல் வெகு இயல்பாக இயங்குகிறது. அது கதைமாந்தர்களை உள்வாங்க ஏதுவாக ஒரு நல்ல மனநிலையைக் கட்டமைக்க உதவுகிறது.

“இந்த கானகத்தின் குரல் என்ற நாவல், ஒரு நாயின் கதை மட்டுமல்ல. தன் ஆதிகுணத்தை மறந்து அமைதியாக வாழும் ஜீவன், இடையில் மிகுந்த தொல்லைகளுக்கும் கொடூரமான அடக்குமுறைகளுக்கும் ஆட்படும்போது, ஜீவமரணப் போராட்டத்தில் நாளைய வாழ்வு நிச்சமில்லை என்ற நிலை முன்னிற்கும் போது, அந்த ஜீவன் தவிர்க்க இயலாமல் மீண்டும் ஆதிகுணத்தை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வகையில் இந்த நாவல் இன்றைய சூழலில் ஒரு குறியீட்டு நாவலாகப் படிக்கப்படவும் கூடும்,” என்று கால சுப்ரமணியம் தனது பதிப்புரையில் கூறுகிறார். 1956-ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நாவல் தமிழினி வெளியீடாக திருத்திய செம்பதிப்பாக 2019-ல் வெளிவந்துள்ளது.

^^^     



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக